
“நாம் நாத்திகர்களுமல்ல, ஆத்திகர்களுமல்ல; பகுத்தறிவுவாதிகள்” என்று ஈழத்தடிகள் சொன்னது பகுத்தறிவு. ஆனால், “பெரியார் தமது பகுத்தறிவு இயக்கத்தை அதன் வளர்ச்சிப் போக்கில் நாத்திகமாக அறிவித்தார்.” - இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை பகுத்தறிவுள்ளோர் புரிந்துகொள்வர்.
- "திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் கறாராக இருக்கிறது." ஆம், உண்மை; அதுதான் அதன் அடையாளம். ஆனால் இதுதான் பகுத்தறிவு என்று வாதம் செய்கின்றவரைப் போன்ற ‘மனுவாதி' வேறு யாரும் இருக்கமுடியாது. இங்கே மனுவாதி என்பது, மனு தர்மம் பற்றிய திராவிட இயக்கப் பார்வையை மேற்கொண்டு நாம் குறிப்பிடுவதாகும். உண்மையில் மனு, மனு தர்மம் குறித்து பல பரிமாணங்களில் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால், திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளாததன் காரணம் பார்ப்பனர்கள் ‘ஆரியர்கள்', பார்ப்பனர்கள் பேராசைக்காரர்கள், இரு நாக்குகள் கொண்டவர்கள், தந்திரசாலிகள், தாசர்களின் தலைவர்கள், வஞ்சக வேந்தர்கள், கொடுமைக் குணமுடையவர்கள், கோழைகள், படுமோசக்காரர்கள், சிண்டு முடிபவர்கள், சிரிக்கின்ற நரிகள், ஒட்டு வித்தைக்காரர்கள், அநீதிக்காரர்கள், (திராவிட) இனம் கெடுத்தவர்கள், ஈடில்லாக் கேடர்கள் (ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை') என்பதால்தான். இதில் முக்கியமானது என்னவெனில், அவர்கள் பிறப்பிலேயே அப்படிப்பட்டவர்கள் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'க் கருத்துதான். அதாவது திராவிடர்கள் ஓர் இனம் ஆரியர்கள் வேறு இனம் என்ற ‘திராவிட இயக்கப் பகுத்தறிவு'தான்.
- மனு தர்மம், பார்ப்பானை உயர்ந்தவன், மேலானவன் என்று கற்பித்தால், திராவிட இயக்கம் அவனைக் கீழானவன், இழிந்தவன், மோசடிக்காரன் என்று கற்பிக்கிறது. அதாவது பிறப்பைக் கொண்டு தகுதியை நிர்ணயிக்கின்ற பணியை மனு செய்ததாகச் சொல்லிக்கொண்டு அதே பணியை திராவிட இயக்கமும் செய்கிறது; அதாவது மனுவுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு அதன் எதிர்மறையாக, அதாவது பார்ப்பான் மாறமாட்டான்; மாறமுடியாது, அவன் இருந்தால் அந்த இயக்கம் உருப்படாது என்ற மாறாநிலைக் கோட்பாட்டை வைத்திருக்கிறது திராவிட இயக்கம்.
- கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் நாத்திகர்களும்கூட அதன் தமிழ் மொழிச் செழுமைக்காகப் புகழுகின்ற நேரத்தில், நல்ல குடிநீர்க் கிணற்றில், அதனுள் இறங்கி தூர் வாருபவர் அடியில் இருந்த சேற்றைக் கொண்டு வந்து, இதுதான் இந்தக் கிணறு, இதன் தண்ணீரைப் போய்க் குடிக்கிறீர்களே என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படிதான் கம்பரசம். அல்லது, அண்ணாதுரையின் சொற்பொழிவுகளில் இருந்து ஆபாசமான இரு வாக்கியங்களை எடுத்து மேற்கோள்காட்டி அண்ணாதுரையின் பேச்சே இவ்வளவுதான் என்று சொல்வதற்கு ஒப்பானதுதான், 12000 பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு 40 பாடல்களை எடுத்துக்காட்டி ஆபாசக் களஞ்சியம் என்று அதை வர்ணிப்பது.
- வேதங்களுக்கும் கோயில் வழிபாட்டுக்கும் அதாவது உருவ வழிபாட்டுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்பது ஆய்வாளர்களின் முடிந்த முடிவு. ஆனால் அண்ணாதுரைக்கோ கோயில் என்பது வேதங்களுக்குரியவர்களின் கூடாரமாகத் தெரிகிறது. எனினும் அதே அண்ணாதுரை கேட்பதெல்லாம் “நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி!” (ஆரிய மாயை) வேதங்கள் இந்த உருவற்ற தேவனைத்தான் சொல்கின்றன என்பது திராவிட இயக்கத்தவர் அறியாதது. . . “தமிழ்க் கலை ஞானமாகிய சைவ சித்தாந்த சாஸ்திரிகளும், ஆகமங்களும் பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்” (ஆரிய மாயை) என்கிறார் அண்ணாதுரை. சைவ சித்தாந்தம் எப்படி சைவ வேளாளர்களுடையதோ அதுபோலவே திராவிட இயக்கமும் என்பதை வரலாற்றாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்பது திராவிட இயக்கம் அறியாத ஆய்வு. ‘கிருஷ்ண' என்றால் கருப்பு நிறம் என்று பொருள். ஆனால் கிருஷ்ணன் ஆரியக் கடவுளாம்; ராமன் கரு நிறத்தவன் என்பது வால்மீகியும் கம்பனும் சொல்லும் விவரம். அதே ராமன் சூரிய குலத்தவன்; மூவேந்தர்களுள் ஒருவரான சோழர்களும் சூரிய குலம்தான், அப்படி இருக்க ராமன் ஆரியனாம். எனவே அண்ணாதுரைக்கு அவர்கள் வேண்டாமாம்.
- சிவன் என்பதற்கு சிவப்பு நிறத்தவன் என்று பொருள்; ஆனால், பிராமணர்கள் நிராகரித்துவிட்ட சைவ சித்தாந்த சாஸ்திரிகள் வேண்டுமாம் அண்ணாதுரைக்கு. ஒருவேளை அண்ணாதுரையின் திராவிடர்கள் சிவந்த நிறத்தவர்களோ? ஆகமங்கள் அனைத்தும் ‘ஆரியர்களின்' மொழியான சம்ஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன என்பது அண்ணாதுரையும் அறியாத உண்மை; அதனால்தான் பிராமணர்கள் ஆகமங்களை வேண்டாம் என்று சொல்வதாக அண்ணாதுரையால் எழுத முடிகிறது. இவை அண்ணாதுரையின் ‘ஆராய்ச்சிக் கட்டுரை'யின் தரத்துக்கு மற்றோர் சான்று.
இத்தகையவர்களின் பொட்டில் அடித்தாற்போன்று திராவிடக் கருத்தியலின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் சொல்லி இருப்பதைப் பாருங்கள்
“. . . but the fact that the Pandyas, Cholas, and other Dravidian races were represented at the same time as having been originally, not rakshasas or monkeys, but Kshatriyas, equally with the Solar and Lunar princes of Aryan India, proves conclusively that they at least were considered almost as civilized and as occupying almost as respectable a position as the orthodox Aryans themselves.”
ஆரியர்களின் குடுமியைக் கேலி செய்து மக்கள் பேசியதாகச் சொல்கின்ற அண்ணாதுரையின் ஆரிய மாயையை ‘ஆராய்ச்சிக் கட்டுரை' , திராவிடத்தின் தந்தையான ராபர்ட் கால்டுவெல் கொடுத்துள்ள கீழ்க்கண்ட குறிப்பைப் படித்ததில்லை போலும்.
“The usage referred to is equally characteristic of the Dravidians. Up to the present day the custom of wearing the hair long, and twisted into a knot at the back of the head, is characteristic of all the more primitive castes in the southern provinces of the Tamil country, and of some of the castes that occupy a more respectable position in the society. In ancient times this mode of wearing the hair was in use amongst all Dravidian soldiers; and sculptured representations prove that a still earlier period it was the general Dravidian custom.”
உண்மை இப்படி இருக்க ”வாழ்நிலையிலிருந்துதான் சிந்தனை உண்டாகிறதே ஒழிய சிந்தனையிலிருந்து வாழ்நிலை உண்டாவதில்லை” என்று சொல்லிக் கொண்டே, சிந்தனையிலிருந்து வாழ்நிலையை உருவாக்கிக் காட்டும் ரசவாதத்தைத் திராவிட இயக்கத்தவர்களாலேயே செய்யமுடியும்.
-நன்றி : வரலாறு.காம்
-நன்றி: காலச்சுவடு, ஏப்ரல் 2009
No comments:
Post a Comment