Wednesday, July 22, 2009

தமிழ்நாட்டு திருத்தலங்களில் மறக்கப்பட்ட திருவாரூர்



திருவாரூர் சைவ திருத்தலங்களில் பழமையானதும் பாடல் பெற்றதுமான ஒரு திருத்தலம். சைவ சமயகுரவர்களால் அதிகம் பாடல் பெற்ற ஒரு திருத்தலம். தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற திருத்தலங்களை விட பழமையானது. ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூரில் உள்ளது. ஆனால் தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற திருத்தலங்களுக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரம் திருவருருக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

தமிழக சுற்றுலாத்துறையும் மற்ற சுற்றுலா சார்ந்த வலைத்தளங்களும் தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற தலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை திருவாரூருக்கு அளிப்பதில்லை. இந்த வலைப்பதிவு திருவாரூரை பொறுத்தவரை ஒரு சிறந்த அறிமுகமாக விளங்கும் என நம்புகிறேன்.

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், திருமகள், இராமர், மன்மதன், முசுகுந்த சக்கரவர்த்தி



சிறப்புக்கள்

  • இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
  • இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

  • ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில்.
  • கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.

  • கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.

  • தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

  • பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.
  • இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்:- 1. க்ஷேத்ரவரபுரம், 2. ஆடகேசுரபுரம், 3. தேவயாகபுரம், 4. முசுகுந்தபுரம், 5. கலிசெலா நகரம், 6. அந்தரகேசுபுரம், 7. வன்மீகநாதபுரம், 8. தேவாசிரியபுரம், 9. சமற்காரபுரம், 10. மூலாதாரபுரம், 11. கமலாலயபுரம் என்பனவாகும்.

  • தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.
  • இத்தலத்திறைவர் வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.

  • 1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.

  • தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.

  • ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆதிரை திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தன் தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

      அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்
    உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்
    விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்
    தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.

  • சுந்தரர் பதிகம்

  • பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்

    போக முந்திரு வும்புணர்ப் பானைப்
    பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
    பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
    இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
    எம்மா னைஎளி வந்தபி ரானை
    அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
    ஆரூ ரானை மறக்கலு மாமே.



  • "இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டத் தலம்.

  • சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.

  • பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
  • சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
  • சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.

  • இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
  • அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

  • கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலமும் இதுவேயாகும்.

  • திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

  • சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.




No comments:

Post a Comment